Publisher's Synopsis
தமிழ் இலக்கியங்களில் நாயன்மார் கதைகளைச் சொல்லும் பெரிய புராணத்துக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. அது சரித்திரங்களைச் சொல்வதனால் இதிகாசம் என்று சொல்வதற்கு ஏற்ற பெருமையை உடையது; நாயன்மார்களுடைய வரலாற்றைக் கவிச்சுவையும் பக்திரசமும் துளும்ப உரைப்பது. சேக்கிழார் இயற்றியது பெரிய புராணம். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சேக்கிழாரை,
"பத்திச் சுவைநனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ"
என்று பாராட்டுகிறார்.
இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்தவர் சேக்கிழார்; சென்னையை அடுத்த குன்றத்தூரில் தோன்றினவர். சேக்கிழார் என்பது அவருடைய குலப்பெயர். அருள்மொழித் தேவர் என்பது இயற்பெயர். அவர் சோழ அரசனுடைய மந்திரியாக இருந்து விளங்கினார்.
பெரிய புராணம் தேவாரத்துக்கு உரை கூறும் நூல்; நாயன்மார் வரலாற்றைக் கூறும் சரித்திரம்; சொற்பொருள் இன்பம் தரும் காப்பியம்; சிவபக்தியை ஊட்டும் இலக்கியம்; படிப்பாருக்கு அமை தியையும் பண்பையும் உண்டாக்கும் தெய்விகப் பனுவல்.